வியாழன்று வருகிறார் ஜெய்சங்கர் -இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அவரது வருகையின் போது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயத்தின் போது இலங்கையில் இரண்டு தினங்கள் தங்கியிருப்பார் என்றும் அதன் போது திருகோணமலை அபிவிருத்தி திட்டம் தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்தியாவுடன் மின்சார இணைப்புத் திட்டம் தொடர்பான மற்றும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது அவர், அதிபர் ரணில் விக்ரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறுவிடயங்கள் தொடர்பிலும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை இந்தியா மற்றும்சீனாவிடமிருந்து உத்தரவாதங்களைப் பெற வேண்டியுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை ஏனைய அனைத்து கடன் வழங்குனர்களுக்கும் இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் வழங்கும் அமைப்புகளுக்கும் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.