யாழ். மாவட்டத்தில் மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்யும் மக்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால்  கொள்வனவு செய்யப்படுகின்றது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் இந்த நிலைமையை இல்லாமல் செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாள் ஒன்றுக்கு யாழ் மாவட்டத்துக்கு 1 லட்சம் லீற்றர் பெற்றோல் தேவைப்படுகிறது.

ஆனால் தற்போது நாளொன்றுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பெற்றோல் தேவைப்படுகிறது. தட்டுப்பாடு ஏற்படும் என்ற எண்ணத்தில் அதிமாக மக்கள் பெற்றோலை கொள்வனவு செய்கின்றனர்.

அதேபோன்று நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் முதல் லட்சத்து 50 ஆயிரம் வரை டீசலும், அத்துடன் 50 ஆயிரம் மண்ணெண்ணையும் தேவைப்படுகிறது.

ஆகவே எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு ஏற்ற வகையில், நான் கலந்துரையாடி வருகின்றேன். எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள். அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம்.

கையிருப்பில் உள்ள பெற்றோலை வைத்து இப்பொது சமாளிக்க முடியும். வேறு இடத்தில உள்ள மக்களும் இங்கே வந்து டீசலை கொள்வனவு செய்கின்றனர். அத்துடன் வெளி மாவட்ட பயணங்களில் ஈடுபடும் வாகனங்கள் அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்யும் நிலை காணப்படுகிறது.- என்றார்