யாழ்ப்பாணம், கிளிநொச்சி இளைஞர்கள் தமிழகத்தில் கைது

 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன் இலங்கையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் அகதிகள் என்ற போர்வையில் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் 21ம் திகதி, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இந்தியக் கடற்கரைக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், கடலோரக் காவல் படையினர், இலங்கைத் தமிழர்களை மீட்டு, மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்ற நபர் பிரபல நகைக்கடையை உடைத்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் அவர் பிணையில் வெளியில் இருப்பதும் தெரியவந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இலங்கையில் தேடப்பட்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தேடப்படும் குற்றவாளிகள் இருவரும் அகதிகளாக வாழ்வதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.