முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரின் மனைவில் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்ச இன்று அதிகாலை அமெரிக்கா பயணமாகியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் இன்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ஈ.கே. 649 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11 மணிக்கு தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறப்பது தொடர்பான விசேட அறிவிப்பை ஊடகவியலாளர் சந்திப்பின்போது பசில் ராஜபக்ச வெளியிட உள்ளார் என கூறப்படுகின்றது.
பதவியைத் துறந்த பின்னர் பொதுஜன பெரமுன கட்சியின் வளர்ச்சிக்காக தனது முழு நேர பங்களிப்பை அவர் ஆற்றவுள்ளதாக தெரியவருகின்றது.