இஸ்ரேலில் சிக்கிய 8000 இலங்கையர்கள்: பாதிக்கப்பட்டோர் விபரம்

 இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் இன்னுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளார் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார கூறியுள்ளார்.

அத்தோடு, அவர்களில் பெரும்பாலோர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைபா ஆகிய நகரங்களில் வாழ்வதாவும் தெரவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் கூறுகையில், “தென் பிராந்தியத்தைச் சேர்ந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரிபவர். வயிற்றிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மற்றுமொரு இலங்கை இளைஞன் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்றால் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தகவல் கொடுக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் தூதரகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் 0094 - 716640560 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாக தகவல்களை அனுப்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி இணை முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் தகவல் கிடைக்காவிட்டால் 1989 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.