படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல்

தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது தொடர்ச்சியாக செல் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தனது நாட்டு எல்லையில் அமைந்திருக்கும் ரபா மீதான படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சும் எகிப்து புதிய போர் நிறுத்த முயற்சியாக உயர் பட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான படையெடுப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வலுத்திருந்தபோதும் அங்கு தரைவழி நடவடிக்கைக்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

இதற்கான சமிக்ஞையாகவே அங்கு தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ரபா நகர கடற்கரையில் வேலை செய்துகொண்டிருந்த மீனவர் ஒருவர், இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

காசா கடற்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை செயற்படுத்தி வரும் இஸ்ரேலினால் அங்குள்ள மீனவர்கள் தொடர்ந்து தொந்தரவுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ‘நட்சரிட் இடைவழியில்’ செயற்படும் இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் கடந்த வியாழனன்று (25) மோட்டார் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக போர் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரபா மீதான படை நடவடிக்கைக்கு இஸ்ரேலிய படையினர் வெளிப்படையாக தயாராகி வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ரபா படையெடுப்பு தொடர்பில் சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில் இஸ்ரேல் இரு மேலதிக படைப்பிரிவுகளை அழைத்திருப்பதோடு, ரபாவுக்கு அருகில் கான் யூனிஸ் நகரில் பாரிய அளவில் வரிசையாக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பது செய்மதி படங்கள் காட்டுகின்றன.

ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதற்கும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 133 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ரபா மீதான படை நடவடிக்கை அவசியம் என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

எனினும் காசா விளிம்பில் உள்ள ரபா நகர் இடம்பெயர்ந்த மக்களின் கடைசி அடைக்கலமாக இருப்பதோடு அங்கிருந்து அவர்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டபோதும் அது நடைமுறை சாத்தியமற்றது என்று ஐ.நா. அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் வடக்கில் காசா நகரில் உள்ள அல் ஷபா குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலை அடுத்து ஒரு குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் காசா நகரில் இயங்கும் கடைசி மருத்துவமனையான அல் அஹ்லி அரபு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இஸ்ரேல் இராணுவம் நடத்திய பாரிய சுற்றிவளைப்பில் அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

--