காசாவில் உதவிப் பொருட்களை பெற உதவி மையத்தில் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் 25 பேர் கொல்லப்பட்டதுடன் 146 பேர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் வாடி பகுதியில், சலா அல்-தின் சாலையில் உதவிப்பொருட்களுடன் வரும் லொரிகளுக்காக காத்திருந்த மக்கள் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
லொரிகளை நெருங்க மக்கள் ஓடியபோது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த 146 பேரில் 62 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் நுஷ்ரைத் அகதி முகாமில் உள்ள அவ்தா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தினர், டிரோன்கள், மற்றும் பீரங்கிகள் இணைந்து கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக சர்வதேச ஊடக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த உயிரிழப்புகள் மூலம் காசாவில் கடந்த ஒக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 56,000 த்தை கடந்துள்ளது.
இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.