ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கிய ராணுவ அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உயிரிழப்பு; நிலவரம் என்ன?


ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ளது.

இன்று அதிகாலை இஸ்ரேல் ஆப்ரேஷன் 'Rising Lion' என ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த வான்வெளித் தாக்குதலில் ஈரானின் அணு ஆயுதத் தளங்கள், ராணுவத் தளங்கள், பயிற்சி முகாம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலால் ஈரானின் உயர் ராணுவ அதிகாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஈரானின் முக்கியமான அணு ஆயுத ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல அறிவியல் ஆராய்ச்சியாளர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என விளக்கமளித்திருக்கிறது. ஈரான் அணு மற்றும் யூரேனிய ஆயுதங்களைப் பலப்படுத்தி வருவதால், அது இஸ்ரேலுக்கு ஆபத்தாகிவிடும் என்ற நோக்கில் ஈரானின் அணு ஆயுதத் தளங்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற போர் பதற்றம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.

இஸ்ரேலும், ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான இந்த தாக்குதல்கள் போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.