சீனாவின் நிதியுதவியில் மேற்கொள்ளவுள்ள அடுத்த திட்டம்!

மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மல்வத்து ஓயா திட்டமானது வவுனியா, வெண்கல செட்டிகுளம் பகுதியை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் காரணமாக அப்பிரதேசத்திலுள்ள 55 ஏக்கர் விவசாய காணிகளுக்குரிய 33 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

கடந்த இரண்டு வருட காலமாக அவர்கள் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளாமையினால் மக்கள் நஸ்ட ஈடு கோரியுள்ளதாகவும் வெண்கல செட்டிகுள பிரதேச செயலாளர் சுலோஜனா கூறினார். அதன் போதே அவர் மேற்கண்டவாறு பதில் அளித்திருந்தார்.

இது தொடர்பில் சார்ள்ஸ் மேலும் தெரிவிக்கையில், இந்த பிரச்சினை தொடர்பில் நீர்பாசன அமைச்சர் மற்றும் அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடிய வேளை வவுனியா, செட்டிக்குளத்தை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் மல்வத்து ஓயாத்திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியதாக அவர் கூறினார்.

முன்னைய அரசாங்கத்தால் குறித்த திட்டத்திற்கு 23000 மில்லின் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நிதியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்காலத்தில் சீனாவின் உதவி மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்காக முன்னைய அரசால் 500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 200 மில்லின் செலவிற்கான வேலைகளே முடிவடைந்துள்ளது.

எதிர்வரும் 02 மாதங்களுக்குள் மிகுதி 300 மில்லியன் நிதிக்குரிய வேலைத்திட்டத்தை, அப்பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவதனூடு முன்னெடுக்கவுள்ளதாகவும் சார்ள்ஸ் கூறினார்.

தவிரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டால் அவர்களிற்கு மாற்று காணிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பிரதேச செயலாளர், அரச அதிபர் ஆகியோர் உரிய திணைக்களங்களுடன் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்திற்கான நிதி எதிர்காலத்தில் சீனாவால் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.