சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம்

அடுத்த ஆண்டு தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சீசனில் ரோகித் சர்மா அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய தலைவராக ஹர்திக் பாண்டயா நியமனம் செய்யப்பட்டார்

ரோகித் சர்மா அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததுடன் ஐ.பி.எல். போட்டி தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார். இதற்கிடையே, அடுத்த ஆண்டு ரோகித் சர்மா வேறு அணிக்கு மாறக்கூடும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வாகன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்வார் என நினைக்கிறேன்

சென்னை அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு மட்டுமே இருப்பார். அடுத்த ஆண்டு ரோகித் சர்மாவை சென்னை அணி தலைவராக பார்க்கலாம்.

ஹர்திக் பாண்ட்யா தற்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறார். இது அவரது தவறு கிடையாது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருக்கிறீர்களா என்று அணி நிர்வாகம் கேட்டால் எந்த வீரர் தான் வேண்டாம் என்று சொல்வார்.

இந்திய டி20 அணியின் தலைவராக இருக்கும் ரோகித் சர்மாவை மும்பை அணி தலைவராக இந்த ஆண்டு நீட்டித்திருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும் என தெரிவித்தார்.