2ம் நாள் பேரணிக்குள் புகுந்த புலனாய்வாளர்கள் - மாணவர்களுடன் முறுகல் நிலை



அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு வரையான இரண்டாம் நாள் பேரணி இன்று காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகி வவுனியா மற்றும் மன்னார் எழுச்சி அணிகளை இணைத்து, முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டுள்ளது.

குறித்த எழுச்சி பேரணியை குழப்பும் நடவடிக்கையில் காவல்துறையினர், புலனாய்வாளர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் பேரணியில் இனம் தெரியாத இருவர் சிவில் உடையில் உள்நுழைந்து பேரணியில் கலந்து கொண்டவர்களை காணொளி எடுக்க முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் இனம் தெரியாத நபருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், பேரணியை முன்னோக்கி செல்லவிடாது இடைமறித்து காவல்துறையினரும் குழப்பம் விளைவித்துள்ளனர்.

தமிழர்களின் அடிப்படை உரிமைகளான தாயகம், தேசியம், சுயநிர்நணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக அமைப்புகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து இந்த பேரணியை முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.