கோடிக்கணக்கில் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்கும் அரச வங்கிகள்: சபையில் பகிரங்கம்

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியால் பெரும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான கடன்கள் செலுத்தப்படாத நிலையில், அவர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனினும் சில பல்கலைக்கழக மாணவர்கள் கடனை செலுத்தாத காரணத்தால், புதிய மாணவர்களுக்கு கடன் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அவர் குறித்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி, இவ்விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் கனவத்திற்கு கொண்டு வந்த போது கடனை வழங்குவதாக தெரிவித்திருந்த போதிலும், தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் வசதி இன்னும் கிடைக்கவில்லை.

கடனுதவி வழங்குவதற்கான அனுமதி மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கான கற்கை நெறிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இந்த கடன் வழங்கப்படாமல் உள்ளதால், விரைவில் அதனை வழங்குங்கள்.

இந்த கடன் வசதி வழங்கப்படாததால் அவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் வங்கியும் இலங்கை வங்கியும் பொறுப்பான நபர்கள் இன்றி பெரும் செல்வந்தர்களுக்கு உரிய கடன்களை வழங்கி, அந்தக் கடன்கள் கோடிக்கணக்கில் செலுத்தப்படாத நிலையில், இவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டாலும், இந்த இரு பல்கலைக்கழகங்களில் சில மாணவர்கள் கடனை செலுத்தாத காரணத்தால், புதிய மாணவர்களுக்கு கடன் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது.

இது அரசாங்கத்துடன் தொடர்புடைய நம்பகத்தன்மை சார்ந்த பிரச்சினை என்பதால் இதனை உடனடியாக இன்றே நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியின் உத்தரவுகளை இந்த வங்கிகள் புறக்கணித்தால், இதில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.