கிழக்கில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கை - வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!


சிறிலங்கா அதிபரால் நாடு முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான கல்முனை, காரைதீவு, சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று போன்ற பிரதேச முக்கிய சந்திகளில் இராணுவம், காவல்துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்மாந்துறை கல்முனை நகர் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்களிற்கு முன்பாகவும் மின்தடை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மக்களின் பாதுகாப்பினை கவனத்திற் கொண்டும் இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலும் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் யாவும் இராணுவத்தினரால் சோதனையிடப்படுகின்றன.

இது தவிர இங்குள்ள பள்ளிவாசல்கள் தேவாலயங்கள் கோயில்கள் உட்பட பல்வேறு பொது இடங்களிலும் சுழற்சி முறையில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் வீதி ரோந்து சேவையிலும் ஈடுபட்டுள்ளனர்.