பணம் அச்சிடுவது தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்!

மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரூபா வருமானம் கிடையாது என்ற காரணத்தினால் மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட நேரிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் 40 வீதத்தை எட்டக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சுக்களை தவிர்ந்த ஏனைய அனைத்து அமைச்சுக்களின் செலவீனங்களை குறைக்க வேண்டியுள்ளது. எதிர்வரும் 6 மாத காலப் பகுதிக்குள் இடைகால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் 2 வருடங்களுக்கான திட்டங்கள் தொடர்பிலான யோசனைகளும் இந்த இடைகால வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்படும்.

பணவீக்கம் அதிகரிக்கப்படும் அளவிற்கு மக்கள் போராட்டங்களும் அதிகரிக்கும்.

அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வெளிநாட்டு நட்பு நாடுகளிடம் உதவிகளை கோரியுள்ளோம்.

மருந்து மற்றும் உரம் ஆகிய உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் எதிர்வரும் வாரத்தில் சீன தூதுவரை சந்திக்க தான் எதிர்பார்த்துள்ளேன்", எனக் குறிப்பிட்டார்.