இந்திய கடற்தொழிலாளர்களை அனுமதிக்க மாட்டோம்: கடற்தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

இலங்கையின் வடக்கு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதியினை வழங்க இலங்கைப் பிரதமர் முன்வந்துள்ளார்.

இதனால் வடக்கு கடற்பகுதியை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்ற கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கடற்தொழிலாளர்கள் சங்க தலைவர் ஒருவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

சென்ற வாரம் பிரதமர் தினேஷ் குணவர்தன, இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்ட விடயத்தினை தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதிபர் இந்தியா வந்தபோது இது குறித்த பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இரு தரப்பிலும் கடற்தொழிலாளர்களின் ஆதரவு மிகவும் அவசியம், இது அரசு சம்பந்தப்பட்ட விடயம் இல்லை, மீனவர்கள் சம்பந்தப்பட்ட விடயம், இந்த விடயத்தில் புரிதல் மிகவும் அவசியம்." எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், நேற்று (12) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வடமாகாண கடற்றொழில் வலையமைப்பின் செயலாளர் என்.எம்.ஆலம், இலங்கை அரசு வடக்கு கடற்தொழிலாளர்களையும், தென்பகுதி கடற்தொழிலாளர்களையும் இரண்டு விதமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

இந்திய கடற்தொழிலாளர்கள் நீர்கொழும்பு அல்லது சிலாபத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தக் கருத்தை பிரதமர் வெளியிடுவாரா? எனவும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

மீனவர் சங்கத் தலைவர் என். எம். ஆலம் வடக்கில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் உள்ளனர்.

அவர்களை சார்ந்துள்ளவர்களுக்கும் இந்த வருமானத்தையே நம்பியுள்ளனர், எனவே, பிரதமரின் இந்தக் கருத்தால் வடக்கு கடற்தொழிலாளர்களை விற்பனை செய்ய அரசாங்கம் பார்க்கிறதா என்றே சந்தேகம் எழுகிறது.

வளங்களை விற்று பணம் சம்பாதிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது, அதிலும் வட பிராந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதில் இன்னும் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

எது எவ்வாறாயினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொள்ள அனுமதிக்க மாட்டோம் எனவும் என்.எம்.ஆலம் இந்த வேளையிலே வலியுறுத்தினார்.