குறைந்துள்ள கச்சத்தீவு பிரச்சினைகள் : இந்திய தரப்பு கருத்து

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் தமிழக கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவு பகுதியில் எதிர்கொண்ட பிரச்சினைகள் தற்போது குறைந்திருப்பதாக இந்திய (India) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) குறிப்பிட்டுள்ளார். 

இந்தியா - சென்னையில் (India - Chennai)  இடம்பெற்ற பாரதீய ஜனதாக் கட்சியின் கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ”10 வருடங்களுக்கு முன் காங்கிரஸ் அரசாங்கம் பதவியில் இருந்தபோது  தமிழக கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவு பகுதியில் எதிர்கொண்ட பிரச்சினைகள் தற்போது குறைந்துள்ளன. 

இதற்கு இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சிறந்த உறவுகளே காரணம். கச்சத்தீவு எனப்படும் பகுதியானது, இலங்கைக்கும் இந்தியாவின் இராமேஸ்வரத்துக்கும் இடையில் அமைந்துள்ளது.

எனவே, அது இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய கடற்றொழில் செய்யும் பிரதேசமாக இருந்தது.

இந்த நிலையிலேயே, இந்திய - இலங்கை கடல் பிரதேச உடன்படிக்கையின்படி அப்போதைய இந்திய காங்கிரஸ் அரசாங்கம், அதனை இலங்கையின் எல்லைக்குட்பட்டதாக ஏற்றுக்கொண்டது” என கூறியுள்ளார்.