குப்பையில் வீசிய லொட்டரி சீட்டால் இந்தியர் ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

இந்தியாவின் கேரளாவில் குப்பையில் கிடந்த லொட்டரி சீட்டினால் முச்சக்கர வண்டி சாரதிக்கு லொட்டரியில் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் மூலவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 53). இவர் முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லொட்டரி குலுக்கல் பரிசு திட்டத்தில் லொட்டரி சீட்டு ஒன்றை சுனில் குமார் வாங்கியுள்ளார். இதற்கான முதல் பரிசு ரூ.1 கோடியாகும்.

தொடர்ந்து கடந்த 18-ந் திகதி லொட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு மறுநாள் பரிசு பெற்றவர்கள் விவரங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையே தனக்கு பெரியளவில் பரிசு தொகை லொட்டரியில் கிடைக்காது என கருதி தான் வாங்கியிருந்த லொட்டரி சீட்டை வீட்டில் உள்ள குப்பை தொட்டியில் வீசிவிட்டு வழக்கமான வேலையை கவனிக்க தொடங்கிவிட்டார்.

ஆனாலும் அதன்பின்னர் லொட்டரி சீட்டு பற்றிய எண்ணம் அவரது மனதின் ஓரத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் தான் குப்பை தொட்டியில் வீசிய லொட்டரி சீட்டை குப்பை கழிவுகளை கிளறி ஒருவழியாக தேடி கண்டுபிடித்து எடுத்தார்.

அப்போது அவரே எதிர்பாராத வகையில் முதல் பரிசான ரூ.1 கோடி அவர் வாங்கிய லொட்டரி சீட்டின் நம்பருக்கு விழுந்தது தெரியவந்தது.

இதை அறிந்ததும் சுனில்குமார் அளவில்லா மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்.

மேலும் இந்த ரூ.1 கோடியை வைத்து அடமானம் வைத்த வீட்டை மீட்டு, புதிய வீடு கட்ட உள்ளதாகவும், வாங்கிய கடன் அனைத்தையும் அடைக்க உள்ளதாகவும், தனக்கு தெய்வம் பரிசை வழங்கி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.