குடிநீர் போத்தல், முகக்கவசங்களின் விலைகளும் அதிகரிப்பு

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மாத்திரமின்றி அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகளும் நாளாந்தம் சடுதியாக அதிகரித்து வருகின்றன. 

நாட்டில் நிலவும் பாரிய டொலர் நெருக்கடிக்கு மத்தியில், அதன் பெருமதி அதிகரித்து வருகின்ற நிலையில் அதற்கு நிகராக இவ்வாறு பொருட்களின் விலைகளும் உயர்வடைந்து செல்கின்றன.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில் குடிநீர் போத்தல்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய 1.5 லீற்றர் குடிநீர் போத்தலின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 120 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. மேலும் 5 லீற்றர் தண்ணீர் போத்தலின் விலை 300 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, முகக்கவசங்களின் விலைகளையும் 30 சதவீதத்தினால் அதிகரிப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அதற்கமைய, 10 ரூபாவாகக் காணப்பட்ட முகக்கவசங்களின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.