7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிப்பு : அஸ்வெசும திட்டத்தில் வரும் புதிய திருத்தம்

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இத்தகவலை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, இந்தத் திட்டம் எதிர்வரும் ஜுலை 1ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்புக்காக உதவி பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக உயர்த்துதல் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக உயர்த்துதல் என்பன ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும்.

அத்துடன், மாற்றுத்திறனாளிகள் சமூகப் பிரிவின் கீழ் கொடுப்பனவுகள் வழங்குவது ஏப்ரலுக்கு பிறகு நிறுத்தப்படும் என்றாலும், அந்தக் குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளுக்கான கட்டணம் செலுத்தும் காலம் டிசம்பர் 31ஆம் திகித வரை நீட்டிக்கப்படும்.

அதேவேளை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளிடமிருந்து புதிதாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான அதிகபட்ச வரம்புக்கு உட்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதி வரை உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும்.