அத்து மீறி அபகரிக்கப்படும் தமிழர் பூர்வீக நிலங்கள் - ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்!

குருந்தூர்மலைப் பகுதியில் தமிழர் நிலங்கள் அபகரிப்புக்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சிறிலங்கா படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் போராட்டம் ஆரம்பிக்கின்ற வேளையில் அந்த இடத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களிடம் அங்கிருந்த இராணுவத்தினர் விபரங்களை பதிவிடுமாறு கோரியுள்ளனர்.

இருப்பினும் ஊடகவியலாளர்கள் விபரங்களை பதிவிட முடியாது என மறுபுத் தெரிவித்த நிலையில் அங்கு மக்கள் அதிக அளவில் ஒன்று கூடியதால் அவர்கள் அந்த பதிவு முயற்சியை கைவிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்காக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்று கூடிய மக்கள்,  பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து குருந்தூர்மலையின் மேற்பகுதிக்குச் சென்ற மக்கள், அங்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த டக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களே இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான போராட்டங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.