இலங்கை தொடர்பில் கடுமையான புதிய தீர்மானத்தை முன்வைக்க இணை அனுசரணை வழங்கிய நாடுகள் தீர்மானம்


இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையில் இந்த குழு இலங்கை வரவுள்ளது.

குறித்த விஜயத்தின் போது அவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கையை மனித உரிமை ஆணைக் குழுவின் 51வது அமர்வில் புதிய ஆணையாளர் அல்லது இடைக்கால ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படும்.

இதேநேரம் ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அனுசரனை மற்றும் இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கொழும்பிலும் ஜெனீவாவிலும் சந்தித்து இலங்கை குறித்த புதிய தீர்மானத்தை ஆராய்ந்துள்ளன.

மனித உரிமை பேரவையின் அமர்வு செப்டம்பர் 12ம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், நாட்டில் அண்மையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக பிரேரணை மாற்றமடையும் என கூறப்படுகின்றது.

அதன்படி இலங்கை தொடர்பான கடுமையான தீர்மானமொன்றை தயாரிக்க வேண்டிய நிலையில் தாம் உள்ளதாக பிரேரணைக்கு அனுசரனை மற்றும் இணை அனுசரணை வழங்கிய நாடுகள் அறிவித்துள்ளன.