இன்னும் சில மாதங்களில் நிலைமை கைமீறிவிடும்!! - ஆழ்ந்த துயரத்தில் ரணில்

நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் ஓகஸ்ட் மாதத்திற்கு பிறகு யாராலும் எதுவும் செய்ய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஏனைய அரசியல்வாதிகள் குழுவொன்றுடன் கலந்துரையாடிய போது ரணில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இக்கட்டான நிலையிலும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏப்ரல் மாதத்தை வீணடித்துள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் கட்சிகளின் பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே மேசையில் ஒன்று கூடி இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது முக்கியமாகும்.

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் மிகவும் நல்ல சந்தர்ப்பங்கள் உருவாகியிருந்தன. எனினும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் துரதிஷ்டவசமாக இழந்துவிட்டோம்.

இந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்த பின்னர் ஆட்சியை பிடிப்பது எளிதாகிவிடும் என்று யாராவது நினைத்தால், அது அப்படி இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் செயற்படும் விதம் குறித்து ரணில் விக்ரமசிங்க ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.