விடுதலைப் புலிகளின் தலைவருக்கு 2009இல் படையினர் முடிவுகட்டி விட்டனர்! கோட்டாபய கூறியதாக தகவல்

 தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு 2009இல் எமது படையினர் முடிவுகட்டி விட்டார்கள் என போரின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய வரும், முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை மீட்டு எரித்தோம், அதன்பின்னர் அவர் எப்படி உயிருடன் இருப்பார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரியவருகிறது. 

பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், பிரபாகரன் மட்டுமல்ல அவரின் மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்து விட்டார்கள்.

மனநோய் பிடித்தவர்கள் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முனைகின்ற அதேவேளை, அவர்களில் சிலர் பிரபாகரனை உயிர்ப்பிக்கவும் முயற்சிக்கின்றனர்.

இந்த மனநோயாளர்களின் கருத்துக்குப் பதிலளிப்பது எமக்குத்தான் வெட்கக்கேடு என குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது. 


விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட நாளன்று இறுதிப்போரும் நிறைவுக்கு வந்தது! மகிந்த

இந்தியாவில் உள்ளவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி வதந்தி பரப்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. 

இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், வன்னியில் இராணுவத்தினருடனான மோதலில் பிரபாகரன் கொல்லப்பட்ட நாளன்று இறுதிப்போரும் நிறைவுக்கு வந்தது.

போர் வெற்றியும் அன்று எம்மால் அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்த பிரபாகரனின் சடலத்தை எமது இராணுவத்தினர் கைப்பற்றி நல்லடக்கம் செய்தனர். இது யாவரும் அறிந்த உண்மை என சுட்டிக்காட்டியுள்ளார்.