அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 5 ஆண்டுகளாக நிலவிய வாகன இறக்குமதிக்கான தடையைத் தளர்த்தி அரசாங்கம் மீண்டும் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்குமான வரி சதவீதங்களை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானியை அரசாங்கம் கடந்த வாரம் வெளியிட்டது.
வாகன உற்பத்தி திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்ட வாகனங்களுக்காக 200 சதவீதம் முதல் 300 சதவீதம் வரையில் வரி விதிக்கப்படவுள்ளது.
அதன்படி, வாகனங்களின் விலை எதிர்காலத்தில் 20 சதவீதம் வரையில் அதிகரிக்கக் கூடும்.
இயந்திர திறன் 660 சிசி பிரிவில் உள்ள வாகனங்களான வெகன்ஆர், சுசுகி எல்டோ உள்ளிட்ட கார்களுக்கு நிலவிய வரி 16 இலட்சம் என்பதுடன், புதிய வரி கொள்கைக்கு அமைய அந்த வரி 18 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.
டொயோட்டா விட்ஸ் மற்றும் டொயோட்டா கொரோலா உள்ளிட்ட ஆயிரம் சிசி இயந்திர திறன் கொண்ட கார்களுக்கான வரி சுமார் 20 இலட்சம் ரூபாவில் காணப்பட்டது.
எனினும் தற்போதைய புதிய வரி கொள்கைக்கு அமைய, குறித்த வாகனங்களுக்கான வரி சுமார் 24 இலட்சம் ரூபாய் அதிகரிக்கும்.
டொயோட்டா அக்வா, டொயோட்டா ஆக்சியோ மற்றும் டொயோட்டா பிரீமியோ உள்ளிட்ட ஆயிரத்து 500 சிசி இயந்திர திறன் கொண்ட கார்களுக்கான வரி சுமார் 57 இலட்சத்திலிருந்து, 66 இலட்சம் வரை அதிகரிக்கக்கூடும்
எனவே இந்த வருடத்திற்குள் 50 ஆயிரம், வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.