தாமரை கோபுரத்தை பார்வையிட வருவோருக்கான முக்கிய அறிவித்தல்



தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கான நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (20) முதல் வார நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிட முடியும்.

அவ்வாறே, வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக கடந்த 15 ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பில் தாமரை கோபுரத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டு நான்கு நாட்களில் சுமார் 10 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தாமரைக் கோபுரத்தின் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திறக்கப்பட்ட முதல் நாளே பத்து லட்சம் ரூபாவை தாண்டி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, பெருமளவிலான மக்கள் வருகையால் தாமரை கோபுர வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த நிர்வாகம் நேற்று இரவு நுழைவுச்சீட்டுக்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாமரை கோபுரத்தை பார்வையிட 500 ரூபாய் நுழைவுச்சீட்டுக்கள் மட்டுமே தற்போது வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.