ஒரு சில வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி! வெளியானது புதிய வர்த்தமானி


வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களுக்கு மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பொது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வர்த்தமானி வெளியிடப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

“சில அரச நிறுவனங்களின் சில அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக சில வாகனங்களை கொண்டு வருவதற்காகவே வர்த்தமானி வெளியி்டப்பட்டது.

மேலும் வெளிநாட்டு உதவியுடன் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கு அதே வெளிநாட்டு உதவியில் கிடைக்கும் பணத்தில் கொண்டு வரப்படுகிறது.

அந்தவகையில் கல்வி அமைச்சுக்கு இரண்டு பேருந்துகள் வெளிநாட்டு திட்டங்களின் கீழ் கிடைக்கின்றன. சுகாதார அமைச்சுக்கு 21 இரட்டை கெப் வண்டிகள், அதேபோன்று நடமாடும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு 03 வாகனங்கள், தொழிலாளர் அமைச்சுக்கு ஒரு வாகனம்.

மேலும், சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு 03 வாகனங்கள் மாத்திரமே. இவை அரசு நிறுவனங்களுக்கு அத்தியாவசியமானவை.

சிறிலங்கன் எயார்லைன்ஸில் உள்ள மற்ற வாகனங்கள் அனைத்தும் வெளிநாட்டு உதவி மூலம் கிடைத்த பணத்தை பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.