இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாவது மதிப்பீடு தொடர்பான எண்ணங்களை தெரிவிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகள் கொழும்பில் இன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
எந்தவொரு நாட்டின் ஜனநாயகத்தையும் சர்வதேச நாணய நிதியம் மதிக்கின்றது.
இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நேரத்தை பாதிக்கும். எனினும் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புதிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும்.
இதேநேரம் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முன்கொண்டு செல்வதற்கு போதுமான முன்னேற்றம் இலங்கையிடம் காணப்படுகின்றது.
இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிப்படையக்கூடிய நிலையிலேயே உள்ளது. கடன் மறுசீரமைப்பானது கத்தி முனையிலேயே இருக்கின்றது.
கடன் மறுசீரமைப்பு வேகத்தை தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டியது அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான திட்டத்தின் பணிப்பாளர் பீட்டர் ப்ரூவர் குறிப்பிட்டுள்ளார்