யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை வட்டுக்கோட்டை பொலிஸார் மடக்கி பிடித்து சாரதியையும் கைது செய்துள்ளனர்.சுழிபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மணலுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்தை கைப்பற்றிய பொலிஸார் சாரதியிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.பொன்னாலை தொடக்கம் சுழிபுரம் சவுக்கடி, புளியந்துறை ஆகிய இடங்களில் தொடர்ந்து இரவு வேளைகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியது.
இவ்வாறான அத்துமீறிய இயற்கை வள அழிப்பை தடுத்து நிறுத்துமாறு கடந்த 21ம் திகதி இடம்பெற்ற வலி.மேற்கு பிரதேச சபைக் கூட்டத்தில் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா வாய்மொழி மூல கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இந்த சட்டவிரோத சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு பொன்னாலைக்கும் சம்பில்துறைக்கும் இடையே பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறும் பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            