பந்தை எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்த மெத்தியூஸ்: தலைக் கவசத்தை தூக்கி எறிந்து எதிர்ப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக விநோதமான ஆட்டமிழப்பொன்றில் இலங்கையின் முன்னணி வீரர் ஒருவர் சிக்கியுள்ளார்.

எந்தவொரு பந்துவீச்சையும் எதிர்கொள்ளாமல் அஞ்சலோ மெத்தியூஸ், பங்களாதேஷ் அணிக்கெதிரான இன்றைய உலக கிண்ண போட்டியில் ஆட்டமிழந்து வெளியேறியமை இலங்கை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சதீர சமரவிக்ரம ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் அடுத்த வீரராக அஞ்ஜலோ மெத்தியூஸ் ஆடுகளம் நுழைந்திருந்தார்.

எனினும் தவறான தலைக் கவசத்தை எடுத்துவந்ததால் அதனை மாற்ற வேண்டும் என மைதான நடுவரிடம் மெத்தியூஸ் கோரியுள்ளார்.

இதனால் மேலதிக நேரத்தை அஞ்சலோ மெத்தியூஸ் எடுத்துக்கொண்டதால், அவர் ஆட்டமிழந்ததாக நடுவரால் அறிவிக்கப்பட்டார்.

பங்களாதேஷ் அணித் தலைவர் ஷஹீப் அல் ஹசனிடமும் இது குறித்து அஞ்ஜலோ மெத்தியூஸ் சுட்டிக்காட்டிய போதிலும் அவரும் துடுப்பெடுத்தாடுவதற்கான நேரம் முடிந்துவிட்டது என வாதிட்டுள்ளார்.

விக்கெட் வீழ்ந்து இரண்டு நிமிடத்திற்குள் அடுத்த வீரர் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற விதி காணப்படுகின்றது.

எனினும் அந்த விதியை பின்பற்றி தவறியதால் இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்ஜலோ மெத்தியூஸ் ஆட்டமிழந்தவராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் மைதானத்தில் இருந்து வெளியேறிய அஞ்சலோ மெத்தியூஸ், தலைக் கவசத்தை தூக்கி எறிந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.