நாட்டை உயர்த்த என்னால் முடியும்-சஜித் பிரேமதாச!

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.துணிச்சலான தலைமைத்துவத்தின் கீழ் மட்டுமே நாட்டை உயர்த்த முடியும் என்றும் அவ்வாறான தொரு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தான் தயார் எனவும் குறிப்பிட்டார்.தற்போதுள்ள நிலைமையை சமாளிப்பதற்கான பயணம் கடினமானது என்றாலும் அதனைச் செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் கோடீஸ்வரர்களுக்கு 600 பில்லியனுக்கும் 800 பில்லியனுக்கும் இடையில் வரிச்சலுகைகளை வழங்கியதாக குற்றம் சாட்டினார்.இந்த அறிவிப்பு காரணமாக பெருமளவிலான வரி வருமானத்தை இழந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அரச செலவினம் அரச வருமானத்தை விட அதிகமாக இருப்பதால், உலகளாவிய நிதி தர நிர்ணய நிறுவனங்கள் இலங்கையின் தரத்தை குறைத்துள்ளன என கூறினார்.திறமையற்ற பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் செலவுகள் வருமானத்தை விட அதிகமாக இருப்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.