இராணுவ முகாம்களின் கீழ் மனித புதைகுழிகள்: மனுவல் உதயச்சந்திரா சந்தேகம்

தமிழர் பகுதியில் கடத்திகொண்டு சென்ற பிள்ளைகளை இரணுவ வீரர்கள்தான் கொலை செய்து புதைத்திருக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் மன்னாரில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விசாரணை வேண்டும், எங்கள் உறவுகள் எங்கே? வெள்ளை வானில் கொண்டு சென்ற பிள்ளைகள் எங்கே? ஓ.எம்.பியும் வேண்டாம், 2 இலட்சமும் வேண்டாம், சரணடைந்த உறவுகள் எங்கே? உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,

ஐ.நா.சபையின் 53 வது கூட்டத்தொடர் இடம் பெற்று வருகிறது. எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு போராட்டங்களை முன்னெடுக்க முடியாது.

ஐ.நா சபையை நங்கள் இவ்வளவு காலமும் நம்பி வந்தோம் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று. ஆனால் அந்த நீதியும் தாமதமாகிறது. இந்த அமர்விலையாவது எங்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நாங்கள் இந்த போராட்டத்தை வீதிகளில் நின்று முன்னெடுத்து வருகிறோம். ஆனால் எமக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய போராட்டம் தொடரும். தற்போது மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றது. தற்போது முல்லைத்தீவிலும் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்களை அகற்றினால் இன்னும் அதிக மனித புதைகுழிகள் கண்டுபிடிக்க முடியும். பிடித்துக் கொண்டு சென்ற பிள்ளைகள் இல்லை என்றால் அவர்கள் தான் கொலை செய்து புதைத்திருக்க வேண்டும்.

இராணுவ முகாம்களில் புதைக்கின்ற மையினால் தான் அவர்கள் காணிகளை விடுகிறார்கள் இல்லை. அதனாலேயே சிங்கள மக்களை குடியேற்றவும், புத்தர் கோவிலை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கின்றார்.

இதன் காரணமாக மனித புதை குழிகள் மூடி மறைக்கப்படும். எனவே ஐ.நா.கூட்டத்தொடரில் ஆவது எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.