IMF ஊழியர் மட்ட ஒப்பந்தம் லீக்…. ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார் ஹர்ஷ !


ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களில் உள்ள பல்வேறு நபர்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவிடம் இருந்தும் இதுவரை மறைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தம் வெளியிடப்பட்டால், அது பாரிய மீறல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர் ‘ரேடியோ சைலன்ஸ்’ என்ற முறைமை கடைப்பிடிக்கப்படுகிறது என மத்திய வங்கியின் ஆளுநர் கூறியிருந்தார்.

அத்தகைய திட்டங்களை இறுதி செய்வதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியிருந்தார்.