கொல்லப்பட்டவர் என்று கூறப்படுகின்ற ஒருவர் உயிருடன் இருக்கின்றார் என்பது மகிழ்ச்சியே: மா.சக்திவேல்


தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்ற கூற்று படையினரின் கெடுபிடிக்கு பொதுமக்கள் உள்ளாகலாம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (16.02.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், "தமிழ் ஈழத்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்" என பழ நெடுமாறன் அவர்கள் பற்ற வைத்த அரசியல் தீ அவர் எதிர்பார்த்ததை விட, அவர் நினைத்ததை விட அனைத்து திசைகளிலும் காட்டுத் தீ போல் பரவிக் கொண்டிருக்கின்றது.

கொல்லப்பட்டவர் என்று கூறப்படுகின்ற ஒருவர் உயிருடன் இருக்கின்றார் என்பது மகிழ்ச்சியே. காணாமலாகக்கப்பட்டோரின் உறவுகளும் தம் உறவுகள் மீண்டும் உயிரோடு வரவேண்டும், அவர்களை காண வேண்டும் என்றே போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தலைவர் அவர்கள் உயிருடன் இருக்கின்றார். அவருடைய உறவுகள் எங்களுடன் தொடர்புகள் இருக்கின்றனர் என அரசியல் குளிர்காய நினைப்பவர்கள் நீண்ட காலம் குளிர் காய முடியாது என்பது மட்டும் உண்மை.

இக்கூற்றினைத் தொடர்ந்து ஜனநாயக வழியில் கொள்கை அரசியல் செய்பவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் குறிவைக்கப்படலாம்.

மேலும் படைமுகாம்கள் பலப்படுத்தப்படலாம். படையினரின் கெடுபிடிக்கு பொதுமக்கள் உள்ளாகலாம், எதிர்ப்பு போராட்டம் தமிழர் பகுதிகளில் விரிவடையலாம், இத்தகைய சூழ்நிலையை விரும்புகின்றவர்களும் இன அழிப்பார்களே.

தமிழ் ஈழத்தலைவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதை அறிவது இந்திய, இலங்கை புலனாய்வாளர்களின் வேலை.

அவ்வாறு இருந்தால் இந்திய அரசாங்கம் அவருக்கு கொடுக்கின்ற அதி உயர் கௌரவமாக அரசியல் கைதி நிலையிலிருந்து விடுவித்து விடுதலைப் புலிகளின் தலைமையகத்தை பழ நெடுமாறன் பாதுகாப்பு படையுடன் ஆதரவுடன் தமிழகத்தின் தென்கோடியில் வைத்திருக்க இடம் கொடுக்குமா? விடுதலைப்புலிகள் தலைவரின் மூச்சுக்காற்றினை எவராலும் தடுக்கவோ, அழிக்கவோ, கொலை செய்யவோ முடியாது. தியாகிகளின் வரலாறும் அவ்வாறே என்பது மட்டும் வரலாற்று உண்மை.

கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரும் புலம்பெயர் தேசத்தில் அவர்களின் மூச்சு காற்றின் வேகத்தில் தான் தமிழர்களின் அரசியல் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அதுவே சர்வதேசத்தின் அரசியல் நீதி கதவை தட்டிக் கொண்டும் இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் நடைபெறுகின்ற முள்ளிவாய்க்கால் ஈகை சுடரேற்றும் தினம், மாவீரர் வாரம் என்பவற்றிலும் ஆயிரக்கணத்தில் தமிழ் மக்கள் ஒன்று கூடுகின்றார்களே அவர்களை உந்தித் தள்ளுகிக்கின்ற சக்தி எது? கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அதே அரசியல் சக்தி மேலோங்கி மக்களை திரளவைப்பதை காணலாம்.அங்கு எழுகின்ற மக்கள் குரல் சர்வ தேசத்தின் காதுகளுக்கு எட்டவில்லை.

சர்வதேச நீதி செயல்பாட்டாளர்களின் காதுகளை திறக்கவும், தமிழர்களின் அரசியல் கோரிக்கைளுக்கு கதவை திறக்கவும் வழி செய்யாதவர்கள் தமிழர்களின் இன அழிப்பிற்கு தொடர்ந்தும் துணை போய்க்கொண்டிருப்பவர்கள் தலைவர் தொடர்பில் புதிய கதையை அவிழ்த்து விட்டு இலங்கையில் தனது நலனுக்கான அரசியல், பொருளாதார பாதுகாப்பு பிடியை தக்கவைக்க நினைக்கின்றார்கள்.

இதனை இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து இனப்படுகொலை, இன அழிப்பு செய்யும் முன்னால் சிந்தித்திருக்க வேண்டும். காலம் கடந்த ஞானம் சுடுகாட்டு ஞானமே என குறிப்பிட்டுள்ளார்.