இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்


‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது.

‘கிறிஸ்துமஸ் கம்ஸ், பட் ஒன்ஸ் எ இயர்’. ஆமாம், கிறிஸ்துமஸ் பண்டிகை ஓர் ஆண்டில் ஒருமுறைதான் வருகிறது.

உலகெங்கும் உள்ள 240 கோடிக் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற சமயங்களைச் சார்ந்த மக்களும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடும் பெருவிழாவாக கிறிஸ்துவின் பிறப்புவிழா காணப்படுகிறது

மேலை நாடுகளில் வாழாவிட்டாலும் இந்த விழாக் காலத்தின்போது, இந்த விழாவைச் சார்ந்த கொண்டாட்டங்களும், அவை உருவாக்கும் களிப்பும் பேரானந்தமும் அனைவரும் அறிந்ததாக காணப்படும்.

கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறப்பு விழா, கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் திகதி கொண்டாடப்படுகிறது.

இதனை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். அதேசமயம், கிழக்கு மரபு வழி திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜனவரி 7ஆம் திகதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

மேலும், கிறிஸ்துமஸ் என்பது ஒரு மரபு வழிக் கொண்டாட்டம் என்றும், அது இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் இல்லை என்றும் ஒரு செவி வழிச் செய்தி உலாவுகிறது.

டிசம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு கிறிஸ்தவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் உள்ள பேராலங்களில் சென்று சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கமாகும்.

நள்ளிரவு திருப்பலியில் நற்கருணை விருந்தும் நடத்தப்படும். இதையொட்டி, கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் பேராலயங்களிலும் கிறிஸ்து அவதரித்ததன் அடையாளமாக, நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி, குழந்தை இயேசு மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பார்கள்.

விண்மீனுக்கு அடையாளமாக காகிதத்திலான விண்மீண்களை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.

கிறிஸ்தவர்களின் வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்தாடை அணிவார்கள். நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து, உபசரிப்பார்கள்.

இரவில் வாண வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது உண்டு. ஒருசிலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, குழந்தைகள் உள்பட பல தரப்பினருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துவதும் உண்டு.

லங்காசிறியின் குழுமத்தின் நல்வாழ்த்துக்கள்

பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது, இசைக் குழுவினர் அணியாகச் சென்று வீடுகள்தோறும் தேவ கீர்த்தனைகளைப் பாடுவார்கள்.

மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்குமே ஒரு உற்சாகமான பண்டிகையாகவே உள்ளது.

மதங்களை கடந்த ஒற்றுமையின் சின்னமாக, கிறிஸ்துமஸ் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.

அந்த வகையில் உலகவாழ் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும்  கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.