முல்லைத்தீவு, முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் முகாமிற்கு வாருங்கள் என அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள் .
இந்நிலையில் முகாமில் உள்ள தகரங்களை தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுவம் ஒருவரால் தொலைபேசியில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு ஐந்து பேர் இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளனர். இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களை தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர்.
அதனால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாகவும் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்திருந்த நிலையில் ஒருவர் மாயமாகியிருந்தார்.
இதனையடுத்து இராணுவ முகாமை சுற்றிவளைத்த மக்கள் இந்த சம்பவத்துக்கு நீதி வேண்டும் என கோரியுள்ளனர்.
மேலும் மாயமாகிய குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி வலை விட்டு தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் இராணுவத்தினரின் அடாடிவடியான இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது