இன்று முதல் மின்வெட்டை குறைப்பதற்கு அரசாங்கம் உறுதி!

இன்று முதல் மின்வெட்டை குறைப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.எரிபொருள் கையிருப்பை பொறுத்து திட்டமிடப்பட்டுள்ள மின்வெட்டு குறைக்கப்படலாம் அல்லது இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, 28,300 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளுடன் மற்றொரு எண்ணெய் டேங்கர் கப்பல் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளது.இதற்கான கொடுப்பனவாக சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, டீசல் தொகையை தரையிறக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.இதேவேளை, கடந்த 2 ஆம் திகதி 37,300 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிச் வந்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கமைய நாட்டின் டீசல் மற்றும் விமான எரிபொருள் இருப்பு இன்றைய தினம் 74,600 மெட்ரிக் தொன்னாக இருக்கும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) 4 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று தெரிவித்திருந்தது.அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின் வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.மேலும் E & F பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 4 மணி நேரம் மின்வெட்டும் மற்றும் மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.ஞாயிற்றுக் கிழமையன்று (6ம் திகதி) காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் A,B,C பகுதிகளுக்கு மட்டும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு மின் வெட்டு அமுல்ப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.