பெரும்பான்மையை இழந்தது ரணில் அரசு

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 113 எம்.பி.க்களின் பெரும்பான்மையை முதன்முறையாக இழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

22ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்த போதிலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த 93 எம்.பி.க்களின் ஆதரவே அதற்குக் கிடைத்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை அதிபராக நியமிக்க 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த போதிலும், பொதுஜன பெரமுனவில் இருந்து பீரிஸ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்படவுள்ளதாக அறிவித்ததை அடுத்து ரணில்-தினேஷ் தலைமையிலான அரசாங்கம் உண்மையில் நாடாளுமன்றத்தில் 122 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது.

ஆனால் 22ஆவது திருத்தச் சட்டத்திற்கான வாக்கெடுப்பின் போது அவர்களில் 11 பேர் வெளிநாட்டில் இருந்துள்ளனர். இவர்களில் கூட அமைச்சர் பதவிகளை வகிக்கும் மூவர் மாத்திரமே ரணில்-தினேஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியும் என கருதலாம்.

மறுபுறம், பல்வேறு காரணங்களை கூறி 13 எம்.பி.க்கள் வாக்கெடுப்புக்கு வரவில்லை. அவர்களில் சிலர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி இருந்தனர். அதன்படி, வெளிநாட்டில் இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டாலும் ரணில்-தினேஷ் அரசுக்கு 100 எம்.பி.க்களின் ஆதரவு கூட இல்லை என்பது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது.

51 எதிர்க்கட்சி உறுப்பினர்களும் 35 சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்ததால் 22வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.