கோட்டாபயவை விரட்டிய ராஜபக்சாக்களின் சதிச் செயல் அம்பலம்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக ராஜபக்ச குடும்பத்தாரால் கோட்டாபயவை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தேசிய அமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அதில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டின் அடுத்த போராட்டம் உணவு நெருக்கடியுடன் கூடிய வர்க்கப் போராக இருக்கும் என அவர் தெரிவித்தார். குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களே போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் அமெரிக்கத் தூதுவரின் தாளத்துக்கு ஆடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இதன் பின்னணியில் இருப்பதாகவும், அவர் ஒரு அமெரிக்க கைப்பாவை என்பதனால் தான் அவர் மீது போர்க்குற்றம் சுமத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.