பதவி விலகியதன் பின்னர் முதல் தடவையாக பகிரங்க தகவல் வெளியிட்ட கோட்டாபய



2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்ற இலங்கை அணிக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றனை வெளியிட்டு கோட்டாபய ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவைத்துள்ளார்.

" துபாயில் நடைபெற்ற ஆசியக்கிண்ண இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். இல்ங்கை அணியினர் குழு காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணி குறிப்பிடத்தக்கது " என கோட்டாபய ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த டுவிட்டர் பதிவானது இலங்கையில் வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ச வெளியிடும் முதல் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதேவேளை, வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இறுதிப் போட்டியில் அபார வெற்றியை ஈட்டி இலங்கை அணி நாட்டின் நற்பெயரை மீண்டும் சர்வதேசத்தில் உயர்த்தியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தலைமைத்துவம் மற்றும் அணியின் ஏனைய வீரர்களின் எல்லையில்லா அர்ப்பணிப்பு என்பனவே இந்த அனைத்து வெற்றிகளுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த வெற்றிக்காக உழைத்த பயிற்றுவிப்பாளர்கள், முகாமைத்துவம் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.