கோட்டாபயவிற்கு தெரியாது ரணிலுக்கு தெரியும்

  


சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்குள் கொண்டுவருவது குறித்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு தெரியாது. ஆனால் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க சுற்றுலாப் பயணிகளின் பெறுமதியை அறிந்தவர் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வந்திறங்கிய ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை வரவேற்க சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிகப்பு பிடியாணை பிறப்பித்து உதயங்கவை தடுத்து நிறுத்த முடியாது. மத்தள விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளேன். அதிகளவான சுற்றுலாப் பயணிகளை மத்தள விமான நிலையம் ஊடாக வரவழைத்து மத்தள விமான நிலையத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பேன். இதற்கு அதிகாரிகளின் உதவியும் எமக்கு தேவை.

கடந்த முறை ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வந்த போது, அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வர 4 மணி நேரம் ஆனது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் இறங்கியதும், அவர்களுக்கு உதவிகளை வழங்கி துரிதமாக விமான நிலையத்திற்கு வெளியில் அனுப்பி வைக்க வேண்டும். கால தாமதம் ஆகும் போது சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் மீது வெறுப்பு ஏற்படும் எனவும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில், ஆரோக்கியமான விதத்தில் நாட்டின் வருவாயை அதிகரிக்கும் வேலைத்திட்டங்களை நான் முன்னெடுத்து வருகின்றேன். இந்த ஆண்டில், அதிகளவான சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்குள் கொண்டுவந்து சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.