விபத்துக்குள்ளான வாகனத்தில் தங்க துப்பாக்கி



ஜா-எல நகர மையத்தில் விபத்துக்குள்ளான காரை சோதனையிட்டதில், அதில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட எம்.பி 5 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

மோதல் ஒன்றின் பின்னர் தப்பி சென்ற வாகனம் ஒன்று ஜாஎல நகரின் மையப்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. அப்போது, ​​ஜா-எல பொலிஸ் நிலைய போக்குவரத்து துறை அதிகாரிகள் வந்து, காயங்களுடன் அங்கிருந்த இருவரை அம்பியுலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதன் பின்னர் காரை சோதனை செய்தனர்.  இதன்போது தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை கண்டுபிடித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் ராகம பிரதேசத்தை சேர்ந்த சிலர் மது அருந்திவிட்டு கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள இரவு விடுதிக்கு சென்று அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் அவர்கள் ராகம பகுதிக்கு வந்து மோதலில் ஈடுபட்டிருந்த விடுதிக்கு குறித்த துப்பாக்கியை எடுத்துச் சென்று பாதுகாவலர்களை துப்பாக்கிகளை காட்டி பயமுறுத்த முற்பட்ட போது பாதுகாவலர்கள் போத்தல்களால் தாக்கியுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில், அந்த துப்பாக்கி பாகிஸ்தானிலிருந்து ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவருக்கு பரிசாக வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.