அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : அதிரடியாக அறிவித்த தமிழ் மக்கள் பொதுச்சபை

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தயாராக உள்ளதாக மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபை பகிரங்கமாக அறிவித்துள்ளது.

குறித்த விடயமானது நேற்று (16) காலை 9:30 மணியிலிருந்து 12.30 மணி வரை கிளிநொச்சி (Kilinochchi) கூட்டுறவு மண்டபத்தில் தமிழ் மக்கள் பொதுச்சபையால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தின் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மேற்படி கூட்டத்தில் சுமார் 200 இற்கும் குறையாத வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில், விவசாய அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்களித்துள்ளனர்.

அத்தோடு, தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பில் நிலாந்தன், பேராசிரியர் கணேசலிங்கம், ஜோதிலிங்கம் மற்றும் ரவீந்திரன் இந்திரன் ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

மேலும், குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் பெருமளவு கேள்விகளை கேட்டதுடன் முடிவில் எல்லா அமைப்புகளும் பொதுத்தமிழ் வேட்பாளரை ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.