க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரம் மற்றும்தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரம் (சா/த), உயர்தரம் (உ/த) மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன, 2022 சாதாரண தர பரீட்சை (O/L) மே 23 (திங்கட்கிழமை) முதல் ஜூன் 1 ஆம் திகதி (புதன்கிழமை) வரை ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவித்தார்.அதேபோல தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 6ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.மேலும் 2022 உயர்தரப் பரீட்சை (A/L) ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அனைத்து பரீட்சைத் தாள்களும் மே 21ஆம் திகதிக்குள் அனைத்து மாகாணக் கல்வி ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய கூட்டு மையங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.542 ஒருங்கிணைப்பு நிலையங்களின் கீழ் இயங்கும் 3842 பரீட்சை நிலையங்களில் 407,129 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 110,367 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என மொத்தம் 517,496 பரீட்சார்த்திகள் 2022 சாதாரண தர (O/L)  பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் பரீட்சைகளின்போது கடமையாற்றும் கண்காணிப்பாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.