நாட்டில் எதிர்வரும் 12ம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும்!

நாட்டில் எதிர்வரும் 12ம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.மூவாயிரத்து 700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டை வந்தடைந்தது.

குறித்த கப்பல் கெரவலப்பிட்டியவை சென்றடைந்தவுடன், எரிவாயுவை இறக்கும் பணிகளை உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், நாளைய தினம் மூவாயிரத்து 740 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய இரண்டாவது கப்பல் வருகை தரவுள்ளது.அத்துடன் மூவாயிரத்து 200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மூன்றாவது கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இம்மாத இறுதிக்குள் வீடுகளுக்கான எரிவாயு தேவை தொடர்பான பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் கூறியுள்ளார்.