கொழும்பில் கஜேந்திரகுமார் எம்.பி அதிரடியாக கைது..! -"என்னை கைது செய்வதற்கான பிடியாணையைக் காண்பியுங்கள்''


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காவல்துறையினருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாக நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தால் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.

காவல்துறை நிலையத்தில் அவர் முன்னிலையானால் வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்படும் என்றும் மன்று சுட்டிக்காட்டி இந்தக் கட்டளையை நேற்று வழங்கியது.

மேலும், இதே குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


"என்னை கைது செய்வதற்கான பிடியாணையைக் காண்பியுங்கள், நான் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்."

இவ்வாறு, இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்வதற்கு காவல்துறையினர் அவரது இல்லத்திற்கு சென்ற போது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து காவல்துறையினருடன் முரண்பட்ட அவர்,

நான் இன்று நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற வரப்பிரசாதம் தொடர்பில் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன், எனக்கு சபாநாயகர் அறிவித்திருக்கிறார் .

என்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்து செல்லுங்கள், நான் அங்கு எனது கடமையை செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற சிறப்புரிமை தொடர்பிலான எனது பிரேரணையை சமர்ப்பித்த பின்னர், நீங்கள் என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

என்னுடைய கடமைகளை முடித்து விட்டு காவல்நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு நேற்றையதினம் இரவு கடிதம் அனுப்பி காவல்துறையினர் என்னிடம் கூறி இருந்தார்கள்.

நேற்றையதினம் இரவு அப்படியான ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு, இன்று காலை ஆறு மணிக்கு வாக்குமூலம் வழங்க வேண்டும் என வந்திருக்கின்றீர்கள்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும் 12 ம் திகதி வாக்குமூலம் வழங்குவேன் என எழுத்துமூலம் அறிவித்துள்ளேன்.

இவ்வாறு எழுத்துமூலம் அறிவித்தல் வழங்கியும், அதனை கருத்தில் கொள்ளாமல் நாளை காலை 10 மணிக்கு காவல்நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்க வேண்டும் என நேற்றிரவு கடிதம் அனுப்பி இருக்கின்றீர்கள்.

இன்றைய தினம் 10 மணிக்கு மருதங்கேணி காவல்நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க வருமாறு கடிதம் அனுப்பிவிட்டு, காலை 6 மணிக்கு வாக்குமூலம் வழங்க வேண்டும் என வந்து நிற்கிறார்கள்.

சிங்கள மக்களுடன் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை, ஆனால் சிங்கள மக்களின் பெயரில் இவர்கள் செய்கின்ற அராஜகத்தை சிங்கள மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்." என தனது எதிர்ப்பை வெளியிட்டார்.


நேற்றைய கருத்து 

எனது தந்தையை சுட்டுக்கொன்றபோதே ஓடியொழியாத நான் தற்போது நாட்டை விட்டு ஓடியொழிய எந்த தேவையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

வெளிநாட்டு பயணத்தடை தொடர்பாக நேற்றையதினம் பிரத்தியேக செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் கலந்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.