பெட்ரோல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!


95 ஒக்டென் பெட்ரோல் நாளை முதல் நாடு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும் என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.

இரண்டு கப்பல்களில் இருந்து தரையிறக்கப்பட்டுள்ள 95 ஒக்டென் பெட்ரோல் இன்று முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் ஆறு வாரங்களுக்கு போதுமான 95 ஒக்டென் பெட்ரோல் கையிருப்பில் இருக்கிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 95 ஒக்டென் பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் எனும் காரணத்தால், 95 ஒக்டென் பெட்ரோல் பாவனையாளர்கள், 92 ஒக்டென் பெட்ரோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மூன்றாம் நபர்களிடம் இருந்து பெற்றோல் உள்ளிட்ட எரிபொருளை வாங்க வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவைக்கு அதிகமாக எரிபொருள் சேகரிப்பில் ஈடுபடும் நபர்கள், அதில் கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, இவ்வாறான வியாபாரங்களை ஊக்குவிக்க வேண்டாம் எனவும், இந்த செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தெரிவிக்குமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் செய்தியில் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.