பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை : பிடிபட்ட முக்கிய ஆதாரம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதனடிப்படையில்,

பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக் கொலை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டீ56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொலைக்கு தலைமை தாங்கியவரான கொஸ்கொட சுஜீயின் உதவியாளரான 'சாமிக' என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் வீட்டுக்குப் பின்னால் உள்ள கறுவாத்தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கியுடன் மகசீன் மற்றும் 32 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர் தொடர்பான விசாரணையின் போது, குறித்த துப்பாக்கியை கொஸ்கொட சுஜீ வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் செய்த குற்றங்கள் மற்றும் கொஸ்கொட சுஜீயின் குழுவினரால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக இந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய்வதற்காகவும், சந்தேகநபர் தன்னியக்க துப்பாக்கிகளை பயன்படுத்தி பயங்கரவாத தடைக்கான தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், அவர் 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, பெலியத்த ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் கார் ஒன்று தும்மலசூரிய பிரதேசத்தில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன், கொலையாளிகள் பயணித்த பெஜிரோ ஜீப்பிற்கு போலி இலக்கத் தகடுகளை தயார் செய்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.