தீர்ந்துபோயுள்ள கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்கள் : இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய அதிகாரி


 கடவுச்சீட்டு அச்சிடுவதற்கான புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துவரும் 30 கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் இந்த ஆண்டுக்கு தேவையான கடவுச்சீட்டு அச்சிடுவதற்கான புத்தகங்கள் வாங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலையில் அறிமுகப்படுத்தப்படவிருந்த இலத்திரனியல் கடவுச்சீட்டு  அக்டோபர் வரை தாமதமானதால், இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதை முடிந்தவரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமும் சுமார் 1,300 கடவுச்சீட்டுகள் அச்சிடப்பட்டாலும், தற்போது அது 250 முதல் 300 வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அவசர தேவை இல்லாவிட்டால் ஒக்டோபர் மாதம் வரை கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மேற்கொள்ள வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்த சூழ்நிலை காரணமாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

--