முன்னாள் ஜனாதிபதிகள் 5 பேரில் 4 பேர் தற்போது தாங்கள் பயன்படுத்தியதில் மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தவிர, அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் தங்கள் மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களில் ஒன்றைத் திருப்பித் தருமாறு ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அனுப்பிய எழுத்துப்பூர்வ அறிவிப்பிற்கமைய, இந்த வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு முன்னர் வாகனத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ஏப்ரல் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய லேண்ட் க்ரஷர் V8 கார் 28 ஆம் திகதியும், மைத்திரிபால சிறிசேன பயன்படுத்திய லெக்ஸஸ் டிபென்டர் 24 ஆம் திகதியும், கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய லேண்ட் ரோவர் ஜீப் 23 ஆம் திகதியும், ரணில் விக்ரமசிங்க பயன்படுத்திய லேண்ட் க்ரஷர் பிராடோ 28 ஆம் திகதியும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் வைத்திருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அமைச்சர் ஒருவர் பயன்படுத்தக்கூடிய அரசு வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை ஜனாதிபதி செயலகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.