பெப்ரவரி மாத பிற்பகுதியில் தேர்தல் நடைபெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு

 

எதிர்வரும் வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சட்டத்தின்படி அன்றைய தினத்திற்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் அமைக்கப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எனவே, 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாத பிற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தற்காலிகமாக முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி இறுதிக்குள் 18 வயதை பூர்த்தி செய்தவர்களை பட்டியலிடுவதன் மூலம் 2022 வாக்காளர் பதிவேட்டை இந்த மாத இறுதிக்குள் சான்றளிக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு, செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்கள் அடங்கிய துணைப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு நவம்பர் நடுப்பகுதிக்குள் இறுதி செய்யப்படும் என்றும் இதன்மூலம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.